எது பகுத்தறிவு?


எது பகுத்தறிவு? நீண்ட நாட்களாய் என் மனதில் இருக்கும் கேள்வி.  அதற்கு விடை தேட முயன்றதின் விளைவே இந்த பதிவு.

சிறுவனாக சுற்றித்திரிந்த காலத்தில் பகுத்தறிவு பேசுபவர்களை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். உலகமே ஒன்றை நம்பியிருக்க எப்படி இவர்கள் மட்டும் வேறுபட்டு
நிற்கிறார்கள் என்று.

நம்மவர்களின் நம்பிக்கைகளை நான் இரு வகையாக பார்க்கிறேன்.
ஒன்று உடலை , உயிரை , மனதை வருத்தும் மூட நம்பிக்கைகள்.
மற்றவை எல்லாம் சாதாரண நம்பிக்கைகள்.
என் பார்வையில் ஒரு சடங்கோ ,சம்பிரதாயமோ யார் மனதையும் புண் படுத்தாத வரையில் அது மூட நம்பிக்கை ஆகாது.

உடன்கட்டை ஏறுதல் முற்றிலுமாக ஒழிந்தது என்றால் அது உடலை உயிரை வருத்தியதால் தான். மனதை வருத்தும் மூடநம்பிக்கைகளை பற்றி இன்னும் பலருக்கு கவலை இல்லை என்பதே என் கருத்து.

என்  தந்தையுடன் ஒரு உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். மாப்பிள்ளை கிளம்பும் போது விநாயகர் கோவிலில் பூஜை செய்து வழியனுப்புவது
வழக்கம். என் அப்பாவை யாரோ ஒருவர் பூஜை செய்ய அழைக்க அவரும் முன்வந்து பூஜை செய்ய மாப்பிள்ளையின் அம்மா இடை மறித்து வேறொருவரை அழைத்தார். காரணம் என் அம்மா இரண்டு வருடம் முன்பு தான் காலமாகி இருந்தார்.
அன்று  வரை விதவைகளுக்கு மட்டும் தான் இந்த கொடுமைகள்
என்று நினைத்திருந்தேன். என் அப்பா வேண்டுமானால் எதார்த்த உலகத்தில் அது சரியே என்று நினைத்திருக்கலாம். ஆனால் எவ்வளவு முயன்றும் என் மனதை
தேற்றிக்கொள்ள முடியவில்லை.

ஒருமுறை ஒரு தம்பதியரின் அறுபதாம் கல்யாணத்திற்கு சென்றிருந்தேன். குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் தம்பதிகள் மீது
நீரூற்றி ஆசீர்வதிக்க அந்த தம்பதியரின் பெண் சம்பந்தி வரிசையில் வர
அங்கிருந்த புரோகிதர் "சம்பந்தியம்மா அப்புறமா வாங்கோ!" என்றார். காரணம் அவர் விதவை.

வாழ்த்துவதற்கும் ஆசிர்வதிக்கவும் நல்ல மனம் இருந்தால் போதும் தானே?. அதை விட பெரிய தகுதி வேறென்ன இருக்க முடியும்.

எதார்த்த உலகம் இப்படி இருக்க பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்
கொள்பவர்கள்  கடவுள் இல்லை. சாமி கும்பிட மாட்டோம் என்று மட்டுமே சொல்லித்திரிகிறார்கள்.
சீர்திருத்த கல்யாணம் என்று சொல்லிக்கொண்டு தாலி இல்லாமல் , புரோகிதர் இல்லாமல்  திருமணம் என்கிறார்கள்.

தங்கள் வசிதிக்கேற்றவாறு பகுத்தறிவை வளைத்துக்கொள்கிறார்கள் .
என் குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொண்டு தன் சமூகத்திற்கு சமமான
பிற சமூகத்தில் இருந்து கூட பெண்ணோ மாப்பிள்ளையோ எடுப்பது  இல்லை இவர்கள்.

இவர்கள் சாடும் சாதாரண மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் யார் மனதையும் காயப்படுத்துவதில்லை. அது இருந்தா இருந்துட்டு போகட்டுமே!

தாலி கட்டிக்கொள்ளுதல் கல்யாணமானதற்கான அடையாளமாககூட இருக்கலாமே?
மேலை நாட்டினர் மோதிரம் மாற்றிக் கொள்வது போன்றதொரு சடங்குதானே அது. எந்த விதத்தில் அதிலிருந்து வித்தியாசப்பட்டு போகிறது. வேண்டுமானால் ஆண்களுக்கும் ஒரு அடையாளத்தை உண்டு பண்ணியிருக்கலாம் பகுத்தறிவாளர்கள். நம்மவர்கள் வழக்கத்தில் இருப்பதெல்லாம் மூடத்தனம் என்றும் மேலை நாட்டினர் பின்பற்றுவதாலேயே அது அறிவார்த்தமானது என்று நம் இளைய தலைமுறைக்கு கற்பித்து போய் விடுவோமோ என்ற பயம் இருக்கிறது எனக்கு.

திருமணத்தில் வாழை மரம் கட்டுவது அழகுக்காக கூட இருக்கலாமே? இது போன்ற எத்தனை சின்ன சின்ன விசயங்களை நம் மக்கள் பின்பற்றிய காரணத்துக்காக மட்டுமே மூடத்தனமாக தூக்கி வீச வேண்டும் என்கிறோம். இதில் எங்கே நம் பகுத்தறிவு இருக்கிறது.

எந்த சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாவிட்டால் ஒரு வெறுமை தானே மிஞ்சும் விழாக்களில். 10 நிமிட வேலையாக மட்டுமே இருக்கும் ஒரு திருமணம்.

ஒவ்வொரு சடங்கு  சம்பிரதாயங்களிலும் ஒரு அர்த்தம் பொதிந்திருக்கும்போது அதை நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட்டோமே என்று தான் வருத்தம்.  சடங்குகளை பற்றி தெரிந்து கொள்வதில் அவ்வளவு சிரமம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நம் பகுத்தறிவாளர்கள் தங்களை வெகுஜன மக்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி கொள்ளவே முயன்றிருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்பாகத்தான் சீர்திருத்த திருமணங்களை பார்க்கிறேன்.

பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நம் சடங்கு சம்பிரதாயங்களை கண் மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன் . அப்படி நாம் செய்ய முற்பட்டால் அது பகுத்தறிவாகாது.

எனவே, முதலில் நாம் மனதை காயப்படுத்தும் மூட  நம்பிக்கைகளை கண்டறிந்து களைந்தெறிவோம்.
பெரியார் கண்ட பகுத்தறிவை அடைய இன்னும் நாம் நிறைய தூரம் பயணிக்கவேண்டும்.  அதுவரை நம்மை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளாமல் வாருங்கள் பயணிப்போம் அவர் பாதையில்......

                                                                                                                  சக பயணியாக
                                                                                                                  பாலகுமாரன்
                                                                                                                  21/10/2012





    



3 comments :

R.Suresh Kumar said...

Super bala. Nice article

K.P.Rajmohan said...

Good Sir

Unknown said...

அருமை!

Post a Comment